செங்கல்பட்டு: தாம்பரத்தில் தனியார் மகளிர் விடுதியில் நேபாளத்தைச் சேர்ந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் பெண்களின் விடுதிக்குச்சென்று ரகளை செய்தபடியே குளியல் அறைக்குள் சென்றுள்ளார். இதனால், உடனே பெண்கள் கூச்சலிடவே விடுதியின் காப்பாளர், அந்த நபரை பிடிக்க முயற்சி செய்தபோது, மாடியிலிருந்து குதித்து தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
உடனே, அங்கிருந்த பொதுமக்கள் அவரைப் பிடித்து காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு தொடர்புகொண்டு புகாரளித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த தாம்பரம் போலீசார், மகளிர் விடுதியில் பொதுமக்களால் பிடித்து வைக்கப்பட்டு இருந்த அந்த நபரை தாம்பரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இரவு நேரம் என்பதால் காவல் நிலையத்தில் உள்ள ஆய்வாளர் இவரை ஏன், அழைத்து வந்தீர்கள் எங்காவது அனுப்பி வையுங்கள் என்று கூறியதாகத் தெரிகிறது. இதனையடுத்து போலீசார் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, தாம்பரம் எல்லை தாண்டி பழைய பெருங்களத்தூரில் உள்ள மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் விட்டுச்சென்றனர்.
இதையடுத்து சந்தேகத்திற்கு இடம் தரும் வகையில் சாலையில் படுத்தபடி உருண்டுக் கொண்டிருந்த அவரைப் பார்த்து, அப்பகுதி மக்கள் பெருங்களத்தூர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர், போலீசார் வந்து விசாரித்தபோது அவரை தாம்பரம் போலீசார் விட்டுச் சென்றது தெரியவந்தது. உடனே இதுகுறித்து பெருங்களத்தூர் போலீசார் தாம்பரம் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, விட்டுச் சென்ற அதே போலீசாரே அந்த நபரை தாம்பரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.
நேபாளத்தைச் சேர்ந்தவர் மகளிர் விடுதி சென்று ரகளையில் ஈடுபட்டதும் துரத்தி வந்தவர்களிடம் இருந்து தப்பிக்க மாடியிலிருந்து குதித்து கால் முறிந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இருந்ததாலோ என்னவோ.. ரகளை செய்தவரை பொதுமக்களே பிடித்து வைத்திருந்தும் காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்லவில்லை எனத்தெரிகிறது. அவ்வாறு அழைத்து செல்லாவிட்டாலும் ரத்த வெள்ளத்தில் இருந்தவரை அருகிலுள்ள மருத்துவமனைக்காவது போலீசார் அழைத்து செல்லாமல் இருந்தது ஏன்.. ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அந்தப் பழியை யார் ஏற்றுகொள்வது என்று காவல் துறையினர் எண்ணியதன் விளைவாக இது நடந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.