செங்கல்பட்டு மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை இருப்பதால் நோயாளிகள் பலர் உயிரிழப்பதாகப் புகார்கள் எழுந்தன. அதன் காரணமாக புதிதாக 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர் அமைக்கப்பட்டது.
அதனை மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் இன்று (செப்.18) திறந்துவைத்தார். அதையடுத்து அவர், மூளை மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சைப் பிரிவில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் தனியார் நிறுவன உதவியுடன் புதிதாக அமைக்கப்பட்ட மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை மற்றும் தலைக்காயம் அறுவை சிகிச்சை மையத்தை திறந்துவைத்தார்.
ஏற்கனவே மூளை மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சைப் பிரிவில் மாதத்திற்கு 100-க்கும் மேற்பட்ட நோயாளிகளும், 30-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும், 90-க்கும் மேற்பட்ட தலைக்காய நோயாளிகளும் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது அமைக்கப்படுள்ள அறுவை சிகிச்சை மையத்தால் தலையில் காயம்பட்ட நோயாளிகளை மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ.55 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் திறந்து வைப்பு!