செங்கல்பட்டு: கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் கள்ள ஓட்டுப் போட முயன்றதாகக் குற்றஞ்சாட்டி திமுகவைச் சேர்ந்த நரேஷ்குமார் என்பவரைத் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் பிப்ரவரி 20ஆம் தேதி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டர். அதனைத் தொடர்ந்து, மேலும் சில வழக்குகளும் அவர் மீது பதிவு செய்யப்பட்டதால் கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த முதல் வழக்கில் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், ஜெயக்குமார் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், புகார் அளித்தவர் தற்போது நல்ல மனநிலையில் உள்ளதாகவும், உடலில் காயங்கள் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று (மார்ச்.3) விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், காயமடைந்த நபர் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற்று சென்று விட்டதால், கடுமையான நிபந்தனையுடன் முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன் வழங்கலாம் என்று தெரிவித்தார்.
இதையடுத்து, திருச்சியில் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், அங்குள்ள கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்கள் இரண்டு வாரத்திற்குக் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதனிடையே, ஜெயக்குமாருக்கு எதிராக நில அபகரிப்பு வழக்கு ஒன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் ஜாமீன் கோரி, நேற்று மார்ச் 3 ஆம் தேதி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது புகார்தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயக்குமார் முன்னாள் அமைச்சர் என்பதால், அவரை ஜாமீனில் விடுவித்தால் புகார்தாரர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறி, ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதி ஜாமீன் வழங்க எந்த முகாந்திரமும் கிடையாது என்று கூறி ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார்.