சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி தனது 19 வயது மகள் கவுசல்யா காணாமல்போனதாக திருச்செங்கோடு புறநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கோரி மகேஸ்வரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் தனது மகளை காணவில்லை என்றும் இதனால் மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனு தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் மனுதாரர் குறித்தான விவரங்கள் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.
அப்போது நீதிபதிகள், நான்கு மாததிற்கு முன் புகார் அளித்தும் காவல் துறை சார்பில் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள்? சாதாரண மக்கள் புகார் அளித்தால் காவல் துறை நடவடிக்கைகள் இப்படித்தான் இருக்குமா? என கேள்வி எழுப்பினர். மேலும் மாதம் ஆனால் சம்பளம் வாங்கும் அலுவலர்கள் அதற்கான பணியை செய்ய வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட காவல் துறை உறவினர்கள், அல்லது அவர்கள் வீட்டில் இப்படி யாரேனும் காணாமல்போய் இருந்தால் இப்படித்தான் சாதாரணமாக எடுத்து கொள்வார்களா? எனவும் நான்கு மாதங்களாக இளம் பெண்ணை மீட்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தனர்.
மேலும் திரைப்பட நடிகைகள் காணாமல் போனதாக புகார் வந்தால் மட்டுமே காவல் துறை செயல்படுமா? என கேள்வி எழுப்பினர். மாதாமாதம் சம்பளம் வாங்கும் அலுவலர்கள் உண்மையுடன் செயல்பட வேண்டும், இல்லை என்றால் அதற்கான பலன்களை அவர்கள் அனுபவிப்பார்கள் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இதனையடுத்து, உத்தரவிட்ட நீதிபதிகள் இந்தப் புகார் தொடர்பாக காவல் துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளன. விசாரணையின் தற்போதைய நிலை தொடர்பான விவரங்களை அறிக்கையாக ஜூன் 17ஆம் தேதி சமர்ப்பிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.