மகாராஷ்டிராவிலிருந்து கடந்த சில நாள்களுக்கு முன்பு மூன்றாம் பாலினத்தவர்கள் நான்கு பேர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திற்கு வந்தனர். சுகாதாரத் துறையினர் அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து, ஜெயங்கொண்டத்தில் உள்ள முகாமில் தங்கவைத்தனர்.
முகாமில் கரோனா பரிசோதனை செய்ததில், நான்கு பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர்கள் நான்கு பேரும் சிகிச்சைக்காக மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் சென்னையிலிருந்து வந்த ஒருவருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன்மூலம் அரியலூர் மாவட்டத்தில் இன்று புதிதாக ஐந்து பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 370ஆக அதிகரித்துள்ளது.
இதில் 355 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 15 பேர் அரியலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.