அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.30.26 கோடி செலவில் 51 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, ரூ.1.56 கோடி மதிப்பீட்டிலான 3 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 27,070 பயனாளிகளுக்கு ரூ.52 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ஆதனக்குறிச்சி, குருவாடி, கோவிலூர், எரக்குடி, பொய்யாதநல்லூர், அருங்கால், சுப்புராயபுரம், கருப்பிலாக்கட்டளை, கீழநத்தம், இலையூர் மற்றும் காட்டாத்தூர் ஆகிய இடங்களில் 2 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 11 துணை சுகாதார நிலையக் கட்டடங்கள்.
அங்கனூர், குமிழியம், குருவாடி, மணக்கால், பொய்யாதநல்லூர், பொய்யூர், தா.பழூர் ஆகிய இடங்களில் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 7 செவிலியர் குடியிருப்புகள். 61 லட்சம் ரூபாய் செலவில் அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள நீராவி சலவையகக் கட்டடம்.
தா. பழூர் மற்றும் இடையக்குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1 கோடியே 8 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 புறநோயளிகள் சிகிச்சை பிரிவுக் கட்டடங்கள். ஜெயங்கொண்டத்தில் 18 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவுக் கட்டடம்.
பருக்கல்லில் 5 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரங்க மேடை கட்டடம். இருகையூர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 13 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடம். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உடையார்பாளையத்தில் 42 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய பூங்கா என மொத்தம் 30 கோடியே 26 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 51 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
மேலும், இவ்விழாவில் முதலமைச்சர் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் அரியலூர் வட்டம், மேலப்பழுவூர் மற்றும் இலந்தைகூடம் ஆகிய இடங்களில் தலா 48 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 2 கால்நடை மருந்தகக் கட்டடங்கள்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரியலூர் மாவட்ட வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் சார்பில் கட்டப்படவுள்ள புதிய பெட்ரோல் பங்க் என மொத்தம் 1 கோடியே 56 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 3 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
இவ்விழாவில் முதலமைச்சர் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 5,289 பயனாளிகளுக்கு ரூ.7.66 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 1,576 பயனாளிகளுக்கு ரூ.12.03 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 1,300 பயனாளிகளுக்கு ரூ.19.16 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 297 பயனாளிகளுக்கு ரூ.14.68 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில் 176 பயனாளிகளுக்கு ரூ.16.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்.
கால்நடைப் பராமரிப்புத் துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.11.68 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 27,070 பயனாளிகளுக்கு ரூ.52 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.
இதையும் படிங்க: ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!