உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு-வருகின்றன. இந்நிலையில் டென்னிஸ் விளையாட்டின் முக்கியத் தொடராகக் கருதப்படும் பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
1891ஆம் ஆண்டு முதல் விளையாடப்பட்டு வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர், களிமண் ஆடுகளங்களில் ஆடப்படும் ஒரே கிராண்ட்ஸ்லாம் தொடராகும்.
இது குறித்து பிரெஞ்சு ஓபன் ஒருங்கிணைப்பாளர்கள் பேசுகையில், ''கரோனா வைரசால் உலகம் முழுவதும் பொதுமக்கள் பாதிப்பைச் சந்தித்துவருகின்றனர். டென்னிஸ் விளையாடும் வீரர்களும், பார்வையாளர்களும் முக்கியம். அவர்களின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் மனத்தில் வைத்து பிரெஞ்சு டென்னிஸ் சம்மேளனம் ஓர் முடிவினை எடுத்துள்ளது. மே மாதத்தில் தொடங்கவிருந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ், செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மே மாதத்தில் என்ன சூழல் நிலவும் என யாராலும் கூற முடியாது. இந்த நிலையில் பிரெஞ்சு ஓபன் தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதும் கடினமே. அதனால் பிரெஞ்சு ஓபன் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது'' என்றார்.
செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி தொடங்கும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வானவில் தேசத்தில் சாதனைப் படைத்த டென்னிஸின் தல - தளபதி ஆட்டம்!