மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் துபாயில் நவம்பர் 7 முதல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர் / வீராங்கனைகள் அடுத்தாண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெறுவர்.
அந்தவகையில், இந்தத் தொடரில் இந்திய வீரர்களான சந்தீப் சவுத்ரி, சுந்தர் சிங் குர்ஜர் ஆகியோர் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றனர். அதேபோல், ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் சமித் அன்டில், நீளம் தாண்டுதல் பிரிவில் சரத்குமார் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதல் பிரிவில் வெண்கலம் வென்றார். அவரைப் போன்று, யோகேஷ் (தட்டு எறிதல்), நிஷாத் குமார் (உயரம் தாண்டுதல்), அஜீத் சிங் (ஈட்டி எறிதல்), வினய் குமார் ஆகியோரும் வெண்கலம் வென்றனர்.
இந்தத் தொடரில் இந்தியா இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஐந்து வெண்கலம் என ஒன்பது பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 24ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா இம்முறைதான் அதிகமான பதக்கங்களை வென்றுள்ளது.
முன்னதாக, லண்டனில் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா ஒரு தங்கம் உட்பட ஐந்து பதக்கங்களுடன் 34ஆவது இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்பட்டியலில், சீனா 25 தங்கம் உட்பட 59 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. அவர்களை தொடர்ந்து பிரேசில் 39 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், கிரேட் பிரட்டன் 28 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.