கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இதுவரை இந்தியாவில் 900-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 25 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும்விதமாக நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பல்வேறு துறை பிரபலங்களும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கும், அந்தந்த மாநில நிவாரண நிதிக்கும் வழங்கிவருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தனது நாடாளுமன்ற நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய், தனது ஒரு மாத சம்பளம் ஆகியவற்றை பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பேரழிவு மேலாண்மையை வலிமைப்படுத்துவதற்காகவும், பொதுமக்களைப் பாதுகாப்பதற்காகவும் #PMCares நிதியை அறிவித்துள்ளார். இது சிறிய அளவிலான தொகையைக் கூட பெற்றுக்கொள்கிறது.
நமது எதிர்கால சந்ததியினருக்கு நாட்டை ஆரோக்கியமானதாகவும், வளமாகவும் மாற்ற நம்மால் முடிந்த உதவியை செய்வோம். இதற்காக நான் என்னுடைய ஒரு மாத சம்பளத்தை நிதியாக கொடுக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்காக ரூ.51 கோடியை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:முன்பு உலகக்கோப்பை நாயகன்; தற்போது உலக நாயகன் - ஜோகிந்தருக்கு ஐசிசி புகழாரம்!