புனே: சமீப காலங்களில் கிடைத்த இனிமையான வெற்றி என்று இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியை வென்றது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி கூறியிருக்கிறார்.
இனிமையான வெற்றி
இதுதொடர்பாக விராத் கோலி கூறியதாவது:
இங்கிலாந்துக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் பெற்றுள்ள வெற்றி சமீப காலங்களில் கிடைத்து இனிமையான வெற்றியாக அமைந்துள்ளது. மற்ற வெற்றியைக் காட்டிலும் ஒரு படி மேலே வைத்து பார்க்கிறேன்.
குறுகிய நேரத்தில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியது மிகவும் சிறப்பானது. கை மீறுவது போல் சென்று கொண்டிருந்த போட்டியை புத்திசாலித்தனத்துடன் மீண்டும் எங்கள் வசமாக்கினோம். இதைச் செய்ததில் பெருமை கொள்கிறேன் என்று கூறினார்.
பேட்டிங்கில் கலக்கிய தவான், கேஎல் ராகுல்
தொடர்ந்து பேசிய அவர், அணியில் தங்களது பங்களிப்பு குறித்து சரியான நோக்கம் உடைய வீரர்களை தேர்வு செய்து வாய்ப்பு அளிக்கிறோம். அந்த வகையில் ஷிகிர் தவான் ஆடிய விதத்தை தனியாக குறிப்பிட வேண்டும். கடினமான சூழ்நிலையில் அவர் அடித்த 98 ரன்கள் அணியில் ஸ்கோரை மதிப்பு மிக்கதாக மாற்றியது.
அதேபோல் கேஎல் ராகுல் ஃபார்ம் மீதும் எழுப்பபடும் கேள்விக்கு சரியான பதிலடி அளித்துள்ளார் என்றார்.
ஒரு நாள் தொடர்
டெஸ்ட், டி20 தொடர்களுக்கு பிறகு இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரின் முதல் போட்டி புனே நகரில் நேற்று (மார்ச் 23) நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 318 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இங்கிலாந்து அதிரடி தொடக்கம்
இதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 14 ஓவிரில் விக்கெட் இழப்பின்றி 135 ரன்கள் குவித்திருந்த போது அந்த அணியின் வேகத்தை அறிமுக வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா கட்டுப்படுத்தினார்.
35 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த ஜேசன் ராய் விக்கெட்டை வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் 1, அணியின் கேப்டன் மோர்கன் 22 என தங்கள் அணிக்கு கிடைத்த நல்ல தொடக்கத்தை, பெரிய ஸ்கோராக மாற்றாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இந்திய பவுலர்களின் துல்லிய பந்துவீச்சு
சிறப்பாக விளையாடி வந்த தொடக்க பேட்ஸ்மேன் பேர்ஸ்டோவும் 66 பந்துகளில் 94 ரன்கள் எடுத்தபோது ஷர்துல் தாகூர் பந்தில் வீழ்ந்தார். இந்திய பவுலர்களின் துல்லியமான பந்துவீச்சால் அடுத்தடுத்து பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் சோபிக்காத நிலையில் இங்கிலாந்து அணி 42.1 ஓவரில் 251 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய அறிமுக வீரர் பிரசித் கிருஷ்ணா 4, ஷர்துல் தாகூர் 3, புவனேஷ் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி மார்ச் 26ஆம் தேதி புனே நகரில் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: பார்சிலோனா அணியின் சாதனை நாயகன் மெஸ்ஸி