ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் ஜூன் 18ஆம் தேதி முதல் ஜூன் 22ஆம் தேதி வரை நடைப்பெறுகிறது. இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இதனைத்தொடர்ந்து இங்கலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த போட்டியானது ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 14ஆம் தேதி வரை நடைப்பெறுகிறது. இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் கலந்துக்கொள்ள இருக்கும் இந்திய அணியை பிசிசிஐ இன்று (மே 7) அறிவித்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துக்கொள்ளும் இந்திய அணியின் வீரர்களின் விவரம்: விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, கில், மயன்க் அகர்வால், புஜாரா, விஹாரி, பண்ட், அஸ்வின், ஜடேஜா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, சிராஜ், சர்துல் தாகூர், உமேஷ் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கே.எல். ராகுல், சஹா ஆகியோர் உடற்தகுதியை பொறுத்து இந்திய அணியில் இடம் பெறுவர் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.