கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணிக்கு 11 பிளேயர்கள் மற்றும் ஒரு மாற்று வீரர் என்பது நடைமுறையாக இருந்து வருகிறது. போட்டியின் போது ஏதேனும் ஒரு வீரருக்குக் காயம் ஏற்பட்டாலோ அல்லது தவிர்க்க முடியாத காரணங்களால் விளையாட முடியாமல் போனாலோ அவருக்கு பதிலாக மாற்று வீரர் ஃபீல்டிங் செய்வார். ஆனால் அவர் பேட்டிங்கோ, பவுலிங்கோ செய்ய முடியாது.
இந்த முறைக்கு பவர் பிளேயர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த பவர் பிளேயர் முறையில் எந்த அணியும் தங்களுக்குத் தேவையான ஒரு மாற்று வீரரை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இறக்க முடியும்.
அவர் பேட்டிங் அல்லது பந்துவீச்சு என இரண்டையும் செய்ய முடியும். இது சம்மந்தமான ஐபிஎல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆனால் இந்த புதிய பவர் பிளேயர் விதியானது இந்த ஐபிஎல் தொடரில் புதிய சிக்கல்களை உருவாக்கும் என்பதினால் தற்போது அதனை அமல் படுத்தும் முடிவு காலதாமதமாக்கப்பட்டுள்ளது.
பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பெயர் போன ஐபில் போட்டிகளில் இந்த விதிக்கு பதிலாக இந்தக் கூட்டத்தில் புதிதாக நோ-பால் அம்பையர் எனும் ஒருவரை நியமிக்கவுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவர் வேலை பந்துவீச்சாளர்களின் நோ-பால்களை மட்டும் கவனிப்பது எனவும், மூன்றாம் அல்லது நான்காம் நடுவரோ கிடையாது எனவும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகம் கூறுகையில், கடந்த சீசனில் நோ-பால் மூலம் பல சிக்கல்கள், விமர்சனங்கள் அம்பையர்களின் மேல் எழுந்தது. தற்போது அதனை சரிசெய்யும் விதத்தில் இந்த நோ-பால் அம்பையர் நியமிக்கப்பட்டுள்ளார் எனக் கூறியுள்ளது.
பவர் பிளேயர் விதியை அமல்படுத்துவதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுவதால், அதனை தற்போது நடைபெறவுள்ள சயீத் முஸ்தக் அலி கோப்பை தொடரில் அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த பவர் பிளேயர் விதி அமலுக்கு வந்ததும் இனி ஒவ்வொரு அணியும் தங்கள் வீரர்களாக 15 பேரை அறிவிக்கலாம். அதில் 12ஆவது வீரராக 4 வீரர்கள் வைக்கப்பட்டு, அவர்களில் யார் வேண்டுமானாலும் களமிறக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கிரிக்கெட்டின் அரசன் விராட் கோலி....!