இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று (செப்.1) நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து, களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில், ஃபக்கர் சமான், கேப்டன் பாபர் ஆசாம் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த அறிமுக வீரர் ஹைதர் அலி, அனுபவ வீரர் முகமது ஹபீஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தினர். தொடர்ந்து அதிரடியில் மிரட்டி வந்த ஹைதர் அலி, தனது அறிமுக டி20 போட்டியிலேயே அரை சதம் விளாசி அசத்தினார். அவரைத் தொடர்ந்து முகமது ஹபீஸும் அரைசதம் அடித்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து, 190 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ஹபீஸ் 86 ரன்களையும், ஹைதர் அலி 54 ரன்களை எடுத்தனர்.
பின்னர் 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு நட்சத்திர வீரர்களான பேர்ஸ்டோவ், மோர்கன், மாலன் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதைத்தொடர்ந்து பான்டனுடன் ஜோடி சேர்ந்த மோயீன் அலி அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து அசத்தினார்.
இருப்பினும் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து, 185 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. மேலும் இப் போட்டியில் சிறப்பாக விளையாடிய முகமது ஹபீஸ் ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:சிஎஸ்கே அணியை சேர்ந்தவர்களுக்கு கரோனா நெகட்டிவ் என தகவல்