இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்று எட்டு ஆண்டுகள் நிறைவடைந்தாலும், இன்றளவும் இப்போட்டியின் ஹைலைட்ஸைப் பார்த்தால் நமக்கு கூஸ்பம்ஸ் தானாகவே வரும். இந்திய ரசிகர்களை பொறுத்தவரையில், இப்போட்டி ஆல்டைம் ஃபெவரைட்டாகாத்தான் இருக்கும். இலங்கை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற மிக முக்கிய காரணமே கவுதம் கம்பிர் அடித்த 97ரன்கள்தான். ஆனால், தோனியின் ஃபினிஷிங்கால் அவர் அடித்த 97 ரன்களுக்கு உரிய அங்கிகாரம் கிடைக்கவில்லை.
இப்போட்டியை இப்போது பார்த்தாலும் கூட, கவுதம் கம்பிர் ஏன் 97 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் இன்னும் மூன்று ரன்கள் அடித்து சதம் அடித்திருக்கலாமே என புலம்பாதவர்களே இருக்க மாட்டார்கள். தான் சதத்தை தவறவிட்டதற்கு தோனிதான் காரணம் என கவுதம் கம்பிர் காரணம் கூறியுள்ளார். அந்த நிகழ்வை குறித்து தற்போது மனம் திறந்தார்.

"நான் 97 ரன்கள் எடுத்தபோது, ஏன் அவுட் ஆனேன் என்ற கேள்வியை பலரும் என்னிடம் கேட்டனர். நான் 97 ரன்கள் எடுப்பதற்கு முன்பு, நான் இலங்கை அணி செட் செய்த டார்கெட்டை நோக்கியே என் பேட்டிங்கில் கவனம் செலுத்தினேன் எனது தனிப்பட்ட ஸ்கோரை நினைத்து பேட்டிங் செய்யவில்லை. குறிப்பிட்ட ஒரு ஓவர் முடிந்த உடன் தோனி என்னிடம், நீ சதம் விளாச இன்னும் மூன்று ரன்கள்தான் தேவை என்பதை நினைவு படுத்தினார்.
இதனால், எனது பேட்டிங் தனிப்பட்ட ஸ்கோரை நோக்கி திசைதிரும்பியது நான் 97 ரன்களில் ஆட்டமிழந்தேன். ஒருவேளை நான் எனது தனிப்பட்ட ஸ்கோரை நினைத்து பேட்டிங் செய்யாமல், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி விளையாடிருந்தால், நிச்சயம் சதம் பூர்த்தி செய்திருப்பேன்.

97 ரன்களில் அவுட்டான பிறகு டிரெஸ்ஸிங்ரூம் நோக்கி சென்றபோது, இந்த மூன்று ரன்கள், என் வாழ்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எனக்குள்ளே நான் சொல்லிக்கொண்டது உண்மையாக மாறிவிட்டது. இப்போதும் ரசிகர்கள் என்னைப் பார்த்தால் ஏன் அப்போட்டியில் மூன்று ரன்களை நீங்கள் எடுக்கவில்லை என்றுதான் கேட்கின்றனர்".

இந்திய அணி வெற்றிபெற 52 பந்துகளில் 52 ரன்கள் தேவைப்பட்டபோது, கவுதம் கம்பிர் திசாரா பெரேராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கம்பிர் ஆட்டமிழந்த பிறகு தோனி - யுவராஜ் சிங் ஜோடி டார்கெட்டை எளிதாக எட்டியது. யுவராஜ் சிங் 21 ரன்களுடனும், தோனி 91 ரன்களுடனும் ஆட்டமிழக்கமால் களத்தில் இருந்தனர்.

குறிப்பாக, தோனி சிக்சர் அடித்து மேட்சை ஃபினிஷ் செய்ய, இந்திய அணி 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பையை வென்று சச்சினின் கனவு மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த ரசிகர்களின் கனவையும் நனவாக்கியது. இந்திய அணி உலகக்கோப்பையை வென்று எட்டு ஆண்டுகள் கழித்து தற்போது தான் 97 ரன்களில் ஆட்டமிழந்தது தொடர்பாக கம்பிர் கூறிய காரணம், சமூகவலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்போட்டியில் தோனி - கம்பிர் ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 109 ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :நானும் மனுஷன்தாங்க... எனக்கும் கோபம் வரும் - மனம் திறந்த தோனி