ஐபிஎல் தொடரின், 13ஆவது சீசனின் இறுதி போட்டி நேற்று துபாயில் முடிவடைந்த நிலையில், அடுத்ததாக 2021 இல், ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறவுள்ள ஐபிஎல் சீசன் குறித்து பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளது. முக்கியம்சமாக, ஐபிஎல் 2021 இல் புதிய அணி ஒன்று வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த புதிய அணி குஜராத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நிச்சயமாக இந்தியாவில் தான் நடைபெறும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, அதற்குள் மூன்று ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் மெகா ஏலத்தை நடத்திட பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பிசிசிஐ அலுவலர் ஒருவர் கூறுகையில், " 2021 இல் ஒன்பதாவது அணியை சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதால், மெகா ஏலம் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த நடவடிக்கையானது கரோனா தொற்றால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில் கொண்டு வரப்பட இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு உருவாகும் புதிய அணியை வாங்குவதில் நிச்சயமாக மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இடையே போட்டி இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதுதொடர்பான விவதாங்கள் உரிய நேரத்தில் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஏற்கனவே தெரிவித்துள்ளார்.