2001இல் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் மும்பையில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதையடுத்து, அந்த அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 15 வெற்றிகளை பெற்று வலுவான நிலையிலிருந்தது.
இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியை ரசிகர்கள் யாராலும் மறக்க முடியாது. அப்போட்டியில் இந்திய அணி ஃபாலோ ஆன் பெற்றிருந்தும் லக்ஷ்மன், டிராவிட், ஹர்பஜன்சிங் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்து மட்டுமின்றி ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த போட்டிகளில் ஒன்றாக இப்போட்டி கருதப்படுகிறது. இப்போட்டியில் 281 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக விவிஎஸ் லக்ஷ்மன் ஆட்ட நாயகன் விருதை வென்றார்
இந்நிலையில் இப்போட்டியில் கிடைத்த வெற்றி குறித்து நினைவுகூர்ந்த விவிஎஸ் லக்ஷ்மன், " அந்தப் போட்டி முடிந்தவுடன் அடுத்த போட்டியில் பங்கேற்பதற்காக நாங்கள் உடனடியாக சென்னை செல்ல வேண்டியிருந்தது.
அதனால் அந்த வெற்றியைக் கொண்டாடுவதற்கு எங்களுக்கு சிறிது நேரம் மட்டுமே கிடைத்தது. ஆனால் அந்த வெற்றியை ஒட்டுமொத்த நாடும் எங்களுடன் சேர்ந்து கொண்டாடியதை போல் உணர்ந்தேன்.
அப்போட்டியில் ஹர்பஜன் சிங் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய பிறகு அணியின் நம்பிக்கை நிலை திடீரென்று மாறியது எனத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற இந்த தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது.