திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பாண்டியன் நகரில் உள்ள சத்யா காலனி என்ற பகுதியில் அமைந்திருக்கும் பொன்னம்மாள் நகரில் கார்த்தி என்பவருக்குச் சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் கார்த்தி கோயில் விசேஷங்களுக்கு நாட்டு வெடிகள் தயாரித்து கொடுத்து வந்ததாகவும், இந்த நிலையில் இன்று (அக்.08) கார்த்தியின் வீட்டில் திடீரென அதிக சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த நாட்டு வெடிகுண்டு விபத்தில் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்ததாகவும், அந்த நபரின் உடல் பாகங்கள் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சில மீட்டர் தூரம் வரையிலும் சிதறிக் கிடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வெடி விபத்தில் 3 குழந்தைகள் உள்பட எட்டு பேர் படுகாயம் அடைந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 10 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் பலி எண்ணிக்கை தற்போது 3 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: மெட்ரோ பணி காரணமாக கட்டடத்தில் விரிசல்; பெற்றோர்கள் போராட்டம்.. பள்ளிக்கு அக்.13 வரை விடுமுறை!
இத்தகைய சூழ்நிலையில், திருமுருகன் பூண்டி காவல் நிலைய போலீசார் தகவலறிந்து விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இங்கு ஏராளமான நாட்டு வெடிகள் வெடிக்காத நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, வேறு எங்கேனும் நாட்டு வெடிகள் சிதறி கிடக்கின்றனவா? என்பது குறித்தும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த விபத்து எப்படி நடந்தது? இங்கு எப்படி நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது? இதற்கு முக்கிய காரணம் யார்? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்