கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக சென்னையில் ஜூன் 19ஆம் தேதி முதல் முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசு ஒதுக்கிய நேரங்களில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்களை வீட்டின் 2 கிமீ சுற்றளவிற்குள் நடந்து சென்று வாங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக வாகனங்களில் சென்று அத்தியாவசிய பொருள்களை வாங்கும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
![ஊரங்கை மீறிய கிரிக்கெட் வீரர் கார் பறிமுதல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7763690_vadfrobin.jpg)
இந்த நிலையில், 20ஆம் தேதி சொகுசு காரில் திருவான்மியூர் பகுதியில் உள்ள மார்க்கெட்டிற்கு ஒரு நபர் வந்தார். இதனைக் கண்ட போக்குவரத்துக் காவல் துறையினர் உடனே காரை மடக்கி காரை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், அவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின்சிங் என்பது தெரியவந்தது. மேலும் இவர் பெசன்ட் நகர் வீட்டில் இருந்து திருவான்மியூர் மார்க்கெட்டிற்கு இளநீர் வாங்க வந்ததாகத் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து ஊரடங்கை மீறியதாக திருவான்மியூர் போக்குவரத்துக் காவல் துறையினர் ராபின்சிங் மீது வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர்.
![கார் பற்றிய விவரம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7763690_car.jpg)
இதையும் படிங்க: போதை கணவன்: காதில் மருந்து ஊற்றிக் கொன்ற மனைவி