டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைசிறந்த தொடக்க வீரராகத் திகழ்ந்தவர் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக். இடது கை பேட்ஸ்மேனான இவர், தனது சிறப்பான ஆட்டத்தால் பல பந்துவீச்சாளர்களுக்கு தலைவலியாக இருந்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக 161 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 33 சதங்கள் உட்பட 12,472 ரன்களைக் குவித்துள்ளார்.
இந்த நிலையில், கரோனா வைரஸ் காரணமாக வீட்டில் முடங்கியுள்ள இவர், சமூக வலைதளம் மூலமாக சண்டே டைம்ஸுடன் வினா- விடை நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது ஆல் டைம் சிறந்த ஐந்து பேட்ஸ்மேன்களாக யாரை தேர்வு செய்வீர்கள் என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த குக், அந்தப் பட்டியலில் முதல் வீரராக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாராவை தேர்வு செய்தார்.
பின் 2004இல் எம்சிசிக்கு எதிராக லாராவின் ஆட்டத்தை நினைவுகூர்ந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், "2004இல் வெஸ்ட் இண்டீஸ்-எம்சிசி அணிகளுக்கு இடையிலான தொடரின் முதல் போட்டி அருண்டெல்லில் நடைபெற்றது. அப்போது நான் எம்சிசி அணியில் இடம்பிடித்திருந்தேன்.
மேத்யூவ் ஹோகார்ட், சைமன் ஜோன்ஸ் என எங்களது அணியில் மிரட்டலான பந்துவீச்சாளர்கள் இருந்தனர். இருப்பினும், உணவு இடைவேளை, தேநீர் இடைவேளைக்கு இடையில் லாரா சிறப்பாக பேட்டிங் செய்து சதம் விளாசினார். அவர் ஒரு ஜினியஸ். மேலும் டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸ்லில் 400 ரன்கள் அடித்த ஒரே வீரர் லாராதான்" என்றார்.
லாராவுக்கு அடுத்தப்படியாக இப்பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், தென் ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ், இலங்கையின் சங்ககரா ஆகியோரை தேர்வுசெய்த அவர், இறுதியாக ஐந்தாவது பேட்ஸ்மேனாக இந்தியாவின் கோலியை தேர்ந்தெடுத்தார். அனைத்து விதமான போட்டிகளிலும் கோலி சிறப்பாக விளையாடுவதால் அவரை இப்பட்டியலில் நிச்சயம் சேர்த்துதான் ஆக வேண்டும் என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: தில்ஷனின் அணியில் இடம்பெற்ற ஒரே ஒரு இந்தியர்!