இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி. சிந்து தலைசிறந்த வீராங்கனைகளில் ஒருவராக வலம்வருகிறார். சுவிட்சர்லாந்தின் பசெல் நகரில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் அவர் ஜப்பானின் நஸோமி ஒகுஹராவை 21-7, 21-7 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார். இந்திய பேட்மிண்டன் துறைக்கு இத்தகைய பெருமையை தேடித் தந்த சிந்துவை கெளரவிக்கும் விதமாக, கேரள ஒலிம்பிக் சம்மேளனம் அவருக்கு இன்று பாராட்டு விழாவை நடத்தியது.
இதில் பங்கேற்ற சிந்துவிற்கு கேரள ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவர் சுனில், 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சிந்து,
டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதுதான் எனது லட்சியமாக உள்ளது. ஆனால், அது அவ்வளவு எளிதில் நடக்ககூடிய காரியமில்லை. அதற்காக நான் கடுமையாக பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நிச்சயம் என்னால் முடிந்த அளவிற்கு நான் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்.
நான் எனது ஆட்டத்திறனை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்திருந்தாலும், நிச்சயம் அடுத்து நடைபெறவுள்ள டென்மார்க் ஓபன் தொடரில் சிறப்பாக விளையாடுவேன் என்றார்.
ரியோவில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.