சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் ஜான் சார்லஸ். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா துறையில் கதைகளை எழுதியுள்ளேன். கடந்த 2014-16ஆம் ஆண்டுகளில் ‘சரவெடி’ என்ற தலைப்பில் ஒரு கதை எழுதி அதில், பத்திரிகை நிருபரான கதாநாயகன், இந்திய பிரதமரிடம் பேட்டி காணும்போது, விவசாயம், நதி நீர் இணைப்பு மற்றும் நதி நீர் பொது பங்கீடு ஆகியவற்றின் நன்மை குறித்து எடுத்துரைப்பார்.
இந்தக் கதையை பிரபல இயக்குநர் கே.வி.ஆனந்திடம் விரிவாகக் கூறினேன். அவர் கதையை நன்றாக உள்வாங்கிக் கொண்டார். எதிர்காலத்தில் இந்தக் கதையை படமாக்கும்போது எனக்கு வாய்ப்பு தருவதாகக் கூறினார். நானும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தேன்.
இந்த நிலையில், என்னுடைய 'சரவெடி' கதையை 'காப்பான்' என்ற பெயரில் கே.வி.ஆனந்த் படமாக்கியுள்ளார். இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. அதில், நதிநீர் இணைப்பு மற்றும் பங்கீட்டு குறித்தும், விவசாயம் குறித்தும் பிரதமருக்கு பத்திரிகையாளராக நடித்துள்ள ஹீரோ விளக்கம் அளிக்கிறார். என்னுடைய கதையை, தலைப்பை மாற்றி எடுத்துள்ள இந்த 'காப்பான்' படத்தை செப்டம்பர் மாதம் வெளியிட உள்ளனர். எனவே, 'காப்பான்' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன்ராமசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இடைக்கால தடை விதிக்கக் கூடாது என்று வாதிட்டனர். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, விசாரணையை வரும் செப்டம்பர் 4ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.