இந்திய பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை புரிந்த 'பாகுபலி' சீரிஸ் படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி தற்போது 'ஆர்ஆர்ஆர்' என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் தெலுங்கு ஹீரோக்கள் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஜூலை மாதம் இறுதியில் ராஜமெளலி, அவரது குடும்பத்தினருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, ராஜமெளலி தனது குடும்பத்தினருடன் வீட்டில் இரண்டு வாரங்களுக்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனிமைப்படுத்திக்கொண்டார். இதிலிருந்து மீண்டு வந்த பிறகு பிளாஸ்மா தானம் செய்வேன் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 12) 14 நாட்கள் தனிமை முடிந்தபிறகு அதிலிருந்து முழுமையாக குணமாகி உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் ராஜமெளலி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, "இரண்டு வார தனிமை காலத்தை முடித்து விட்டேன். எந்த அறிகுறிகளும் இல்லை. பரிசோதனை முடிவில், எங்கள் அனைவருக்கும் நோய்த் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.
பிளாஸ்மா தானம் செய்ய தேவையான ஆண்டிபாடீஸ் எங்கள் உடலில் உருவாகி உள்ளதா என்பதை பார்க்க மருத்துவர் எங்களை மூன்று வாரங்கள் காத்திருக்க சொல்லி இருக்கிறார்" என்று கூறியுள்ளார்.