சென்னை: பழைய வண்ணாரப்பேட்டை, தீக்குளிக்கும் பச்சை மரம், மணல் நகரம் உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்ததோடு, சின்னத்தம்பி சீரியல் மூலம் பிரபலமான பிரஜன், நடித்த அரசியல் கலந்த த்ரில்லர் படத்தின் தயாரிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.
இப்படம், ஸ்ரீ கிருஷ்ணா ஃபிலிம் புரொடக்க்ஷன்ஸ் சார்பில், எஸ்.வி. சூரியகாந்த் தயாரிப்பில், சித்தார்தா இணைத் தயாரிப்பில் சங்கர், கென்னடி இருவரது இயக்கத்தில் உருவாகவுள்ளது. இக்கதையில் மற்றொரு நாகனாக ஆஜீத் நாயக் அறிமுகமாகிறார். இவர்களுடன் இணைந்து கதாநாயகிகளாக பிரகயா நயன், ரஷ்மி ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசைப் பள்ளி மாணவர் விஜய் யாட்லீ இசையமைக்க, வினோத் குமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு தருமபுரி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
இது குறித்து இயக்குநர்கள் ஷங்கர், கென்னடி கூறியதாவது, “அரசியல் கலந்த கிரைம் த்ரில்லர் கதை இது. தவறான அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தால் சாமானிய மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்ற முக்கியமான விஷயத்தை இதில் சொல்ல இருக்கிறோம்.
இணைபிரியா இரண்டு நண்பர்கள், ஒரு அரசியல்வாதியின் சூழ்ச்சியில் சிக்குகிறார்கள். அதிலிருந்து எப்படி மீண்டார்கள், இறுதியில் அவர்களது நட்பு என்னவானது எப்பது படத்தின் திரைக்கதை.
நட்பின் ஆழத்தை இதுவரை யாரும் சொல்லிறாத ஒரு வித்தியாசமான கோணத்தில் சொல்கிறோம். நிச்சயம் இந்தப் படம் வெளியான பிறகு, படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் நமக்கு இப்படியொரு நட்பு கிடைக்கவில்லையே என்று ஏங்குவார்கள்” எனக் கூறினர்.
இதையும் படிங்க: அசால்ட் காட்டும் அரபிக் குத்து; 100 மில்லியனை தாண்டியது...!