டோக்கியோ: தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக தயாரான 'சாஹோ' ஜப்பானில் திங்கள்கிழமை வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் சுஜித் இயக்கத்தில் கடந்தாண்டு ஆக்ஸ்டில் வெளியான 'சாஹோ' கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியிருந்த இப்படம் 400 கோடி ரூபாய் வரை பாக்ஸ் ஆபிஸில் வசூலித்தது.
ஆக்ஷன் திரில்லர் படமாக அமைந்திருந்த 'சாஹோ' தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியானது. மூன்று மொழிகளில் தயாராகி படம் வெளியாகும் என ரிலீசுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டாலும், தெலுங்கில் தயாராகி தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
அத்துடன் ஆக்ஷன், சாகச காட்சிகளுக்கான விஷுவல் எபெஃக்ட்ஸ், கிராஃபிக்ஸ் அவ்வளவு சிறப்பாக இல்லை என பேச்சுகளும் நிலவின. இதனால் மிகப்பெரிய வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட 'சாஹோ' பாக்ஸ் ஆபிஸில் சொதப்பியது.
இதையடுத்து தற்போது படத்தை ஜப்பானில் வெளியிட்டுள்ளனர். கடந்த சில நாள்களுக்கு முன் படத்தின் ட்ரெய்லர் அங்கு வெளியிட்ட நிலையில், ரசிகர்கள் ஆரவாரத்துடன் அதனைக் கண்டு ரசித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து படமானது ஜனவரி 27ஆம் தேதி ஜப்பானில் திரைக்கு வந்துள்ளது. 'சாஹோ' படத்தில் பிராபஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்திருப்பார். நடிகர் அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் படத்தில் நடித்திருப்பார்கள்.
'சாஹோ' படத்தைத் தொடர்ந்து தற்போது பூஜா ஹெக்டே ஜோடியாக ரொமாண்டிக் படத்தில் நடித்துவருகிறார் பிரபாஸ்.