மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி பிறகு தமிழ், தெலுங்கு மொழி ஆகிய படங்களில் நடித்து வருபவர் ஷம்னா காசிம். லாக் டவுன் சூழலில் வீட்டில் இருக்கும் இவர், அடிக்கடி டிக்டாக் தளத்தில் வீடியோ வெளியிட்டு வந்துள்ளார்.
இதைக்கண்ட ஒருவர், ஷம்னாவை காதலிப்பதாக கூறி ஆசை வார்த்தையால் பேசியுள்ளார். இருப்பினும் அந்த காதலை ஏற்காமல் அவர் தனது வீட்டில் வந்து பெற்றோர்களிடம் பேசுமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த நபர், நான்கு நபர்களுடன் ஷாம்னாவின் வீட்டிற்கு சென்று பேசியுள்ளார். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்ததால் ஷம்னாவின் பெற்றோர், திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இருப்பினும் அவர்கள் தொடர்ந்து மிரட்டி வந்ததால் ஷம்னாவின் பெற்றோர் கேரள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து ஷம்னாவின் பெற்றோர் கூறுகையில், "என் மகளை திருமணம் செய்து கொடுக்குமாறு ஒருவர், தனது நான்கு நண்பர்களுடன் வந்தார். அவர்களது பெற்றோரை சந்தித்து பேசியபோது, ஒரு லட்ச ரூபாய் கேட்டு மிரட்டினர். திருமணத்திற்கு முன்பே பணம் கேட்டதால் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
பிறகுதான் அவர்கள் போலியான கும்பல் என்பது தெரியவந்தது. மேலும் பணத்தை கொடுக்கவில்லை என்றால் எதிர்காலத்தை அழித்துவிடுவோம் என்று மிரட்டினர். ஆதலால் அவர்களை கைது செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இதையடுத்து அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், கொச்சி மரடு காவல் துறையினர் அந்த நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.