இயக்குநர் ஆர்.ஜி. கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'தேவதாஸ் பார்வதி'. இதில் நாயகனாக நடிகர் ராஜ் நடித்துள்ளார். நாயகியாக ஸ்மிருத் வெங்கட் நடித்துள்ளார். ஆந்தாலஜி திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படம் அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தில் வரும் 'என்னோட பாஷா' என்ற பாடலை மறைந்த பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். இந்த பாடல் பாலசுப்ரமணியம் இறுதியாக பாடிய பாடலாகும்.
'என்னோட பாஷா' பாடலை எஸ்.பி.பி ஜூலை மாதம் இறுதியில் உற்சாகத்துடன் பாடி கொடுத்துள்ளார். ஆகஸ்ட் மாதம் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எஸ். பி. பாலசுப்பிரமணியம் செப்டம்பர் மாதம் இறுதி வாரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஒரு உலக மகா இசைக்கலைஞனின் இறுதிப்பாடல் தன் படத்தில் இடம் பெற்றதற்காகப் பெருமையும் துயரமும் கலந்த உணர்வுடன் இருப்பதாக இயக்குநர் ஆர்.ஜி. கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தப் பாடலை இயக்குநர்கள் கே.எஸ் .ரவிக்குமார், விக்னேஷ் சிவன், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா வாரியார், தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் வெளியிட்டுள்ளனர்.
எஸ்.பி.பி ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடி இருந்தாலும் அவரது கடைசிப் பாடலாக 'என்னோட பாஷா' பாடல் ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளது. தன் இறுதிப்பாடலை எஸ்பிபி பாடியதன் மூலம் தங்கள் படத்திற்கு ஒரு அழுத்தமான முகவரியைக் கொடுத்து சென்றுள்ளார் என்று 'தேவதாஸ் பார்வதி' படக்குழுவினர் நெகிழ்ச்சியில் உள்ளனர்.