தமிழ் சினிமாவின் கவிஞர், பாடலாசிரியர், கதை வசனகர்த்தா, நடிகர், தயாரிப்பாளர், நூலாசிரியர் என பன்முகங்களைக் கொண்டவர் கண்ணதாசன். இவர் 1927ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் சிறுகூடல் பட்டியில் பிறந்தார். முத்தையா என்ற இயற்பெயர் கொண்ட இவர், எட்டாம் வகுப்பு வரை படித்தார்.
படிக்கும் காலத்திலேயே கவிதை, பாடல் எழுதுவதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர், தனது 17வது வயதில் பத்திரிகை ஆசிரியராகப் பணிபுரிந்தார். இதனையடுத்து திரை ஒலி, சண்டமாருதம், தென்றல், தென்றல் திரை உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றினார். பத்திரிகை துறையில் இருக்கும்போதே கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் மூலம் கிடைத்த நற்பெயருக்குப் பின் திரைப்படங்களுக்குப் பாடல் எழுத வேண்டும் என்ற எண்ணம் கண்ணதாசனுக்கு ஏற்பட்டதால் மாடர்ன் தியேட்டர்ஸ் கதை டிபார்ட்மெண்டில் கண்ணதாசன் சேர்ந்தார்.
இதனையடுத்து 1949ஆம் ஆண்டு கே.ராம்நாத் இயக்கத்தில் 'கள்வனின் காதலி' படத்தின் மூலம் பாடலாசிரியராகத் திரைத்துறையில் அறிமுகமாகி தத்துவம், காதல், சோகம், சந்தோஷம் எனப் பல பிரிவுகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலத்தால் அழியாத திரைப்பாடல்கள் எழுதி, முழுதாக 30 ஆண்டுகள் திரைத்துறையை ஆளுமைசெய்தார் கண்ணதாசன். பாடல்கள் மட்டுமல்லாமல் நடிப்பிலும் ஆர்வம்காட்டிய அவர் பராசக்தி, ரத்தத்திலகம், கருப்புப் பணம், சூரியகாந்தி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். சிறந்த படைப்பாளரான இவர் இயேசு காவியம், பாண்டிமாதேவி உள்ளிட்ட காப்பியங்களையும் அம்பிகை அழகு தரிசனம், தைப்பாவை உள்ளிட்ட சிற்றிலக்கியங்களையும் இயற்றியுள்ளார்.
அர்த்தமுள்ள இந்துமதம் போன்ற ஆன்மிகம், சமயம் சார்ந்த நூல்களையும், அனார்கலி, சிவகங்கைச்சீமை, ராஜ தண்டனை, அருணோதயம் போன்ற நாடகங்களையும் எழுதியுள்ளார். 'சேரமான் காதலி' படைப்பிற்காக சாகித்ய அகாதமி விருதுபெற்ற இவர், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், நவீனங்கள், கட்டுரைகள் என வாழ்க்கையின் ஆழமான ரகசியங்களை தன்னுடைய எளிமையான வரிகள் மூலம் மக்களுக்குக் கொண்டுசேர்த்தார். கவியரசர் கண்ணதாசன் தனது 54ஆவது வயதில் 1981ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.”நான் நிரந்தரமானவன் அழிவதில்லை... எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை... படைப்பதால் என்பேர் இறைவன்” என்று எழுதிய கண்ணதாசனின் 93ஆவது பிறந்தநாள் இன்று.