மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டுவரும் தலைவி திரைப்படத்திற்காக தமிழ் கற்றுவரும் நடிகை கங்கனா ரனாவத், படத்தின் கதைக்கு தேவைப்படுவதால் தான் தமிழை கற்றுவருவதாகவும் தமிழ் மொழி கற்பதற்கு மிகவும் கடினமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்த அழகு நிலையம் ஒன்றின் தொடக்க விழாவில் பங்கேற்ற அவர் இது குறித்து பேசுகையில், ”தமிழ் மொழி கற்பதற்கு மிகவும் கடினமாக உள்ளது. தலைவி திரைப்படம் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. எனவே இந்தியுடன், தமிழ் மொழியையும் பேசி நடிக்கும்போது நான் வசனங்களை மனப்பாடம் செய்து நடித்துவருகிறேன். முன்பு நான் ஆங்கிலம் கற்றுவந்தபோது தமிழ் மொழியையும் உடன்சேர்த்து கற்க விரும்பினேன். தற்போது கதைக்கு தேவைப்படுவதால், தமிழ் கற்றுவருகிறேன்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: கிளாப் தட்ட தொடங்கியது தலைவியின் ஆட்டம்!
தமிழ் கற்பதைத் தவிர்த்து கூடுதலாக, பரதநாட்டியக் கலையையும் முறையாகக் கற்றுத் தேர்ந்துவரும் கங்கனாவின் நடன காணொலிகளை அவ்வப்போது அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகின்றனர். தவிர இப்படத்திற்காக ’ப்ராஸ்தடிக் மேக்கப்’ எனப்படும் செயற்கை ஒப்பனைக்காக கங்கனா பல மணி நேரங்களை தினசரி செலவிட்டுவருகிறார்.

முன்னதாக கடந்த நவம்பர் பத்தாம் தேதி தலைவி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை, திரைக்குழு படத்தின் க்ளாப் போர்ட் படத்தைப் பகிர்ந்து, ”தலைவி படத்தின் அழகான பயணத்தைத் தொடங்கியுள்ளோம்” என்று செய்தி வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்திருந்தது.
ஏ.எல். விஜய் இயக்கத்தில், கங்கனாவின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகிவரும் ’தலைவி’ திரைப்படத்தில் கங்கனாவைத் தவிர்த்து, நடிகர் அரவிந்த் சாமி மட்டுமே படத்தில் இணந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தலைவிக்காக கங்கனாவின் அர்ப்பணிப்பு!