சாவித்திரி 1935 டிசம்பர் 6 அன்று பிறந்தார். இவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகை, இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியவற்றில் முத்திரை பதித்தார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் 318 படங்களில் நடித்திருக்கிறார்.
சாவித்திரி ஆந்திரப் பிரதேசத்தில் குண்டூரில் சிறாவூர் என்ற இடத்தில் நிசங்கார ராவ் குருவையா, சுபத்திராம்மா ஆகியோருக்குப் பிறந்தவர். இவர் சிஸ்டா பூர்ணையா சாத்திரிகளிடம் இசை, நடனம் பயின்றார். இளம்வயதிலேயே மேடைகளில் தோன்றி நடித்தார். நவரசங்களையும் விழியோரத்தில் நிறுத்தி, உதட்டசைவால் அனைவரையும் ஆக்கிரமித்து, நடிகையர் திலகம் என்ற பட்டப் பெயரோடு பவனிவந்தவர் இவர்.
![நடிகையர் திலகம் சாவித்திரி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13837526_aasasdd.jpg)
பாசமலர்
1961ஆம் ஆண்டு மே 27 அன்று 'பாசமலர்' திரைப்படம் வெளியானது. பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி, சாவித்திரி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், இன்றுவரையில் ரசிகர்களிடையே பாசம் குறையாமல் உள்ளது. சிவாஜி கணேசன், சாவித்திரி இருவரும் போட்டி போட்டு நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கலங்கவைத்தனர்.
![பாசமலர் சாவித்திரி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13837526_savithri.jpg)
இந்தப் படத்துக்கு பிறகு எத்தனையோ அண்ணன், தங்கை சென்டிமென்ட் படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், பாசமலர் படத்தைத் தாண்டிய படம் வெளியாகவில்லை. இன்று வரையில் அண்ணன்-தங்கை பாசம் என்று சொல்லும்போது அடுத்தகணமே நம் நினைவில வந்து நிற்பது பாசமலர் திரைப்படம். நம் வீட்டிலோ பொது இடத்திலேயோ யாராவது தங்கையைத் திட்டினால் உடனே அண்ணன் கோபப்படும்போது, அங்கிருக்கும் சிலர், 'ஆமா இவங்க பெரிய பாசமலர் சிவாஜி-சாவித்திரி' என்று சொல்ல கேட்டிருப்போம். அந்த அளவிற்கு இப்படத்தில் சிவாஜியும், சாவித்திரியும் நடிக்காமல் உணர்வுப்பூர்மாக வாழ்ந்திருப்பர்.
![ஜெமினி கணேசன் - சாவித்திரி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13837526_saviss.jpg)
கோமாவில் சாவித்திரி
1952ஆம் ஆண்டு காதல் மன்னன் ஜெமினி கணேசனை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு விஜயா சாமுண்டீஸ்வரி என்ற மகளும், சதீஷ்குமார் என்ற மகனும் உள்ளனர்.
19 மாதங்கள் கோமா என்னும் ஆழ்மயக்க நிலையில் இருந்த சாவித்திரி 1981 டிசம்பர் 26ஆம் நாள் இறந்தார். அப்போது அவருக்கு வயது 45. அப்போது அவருக்கு நீரிழிவு நோயும் உயர் ரத்த அழுத்தமும் இருந்தன.
இந்திய அரசு அவரது நினைவாக 2011ஆம் ஆண்டு நினைவு அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நடிகையர் திலகம்
2018ஆம் ஆண்டு நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு ‘நடிகையர் திலகம்’ படம் வெளியானது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியானது.
![நடிகையர் திலகம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13837526_aasa.jpg)
இப்படத்தில் துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாக, கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடித்துள்ளனர். சாவித்திரி பிறந்தநாளான நேற்றுமுதல் (டிசம்பர் 6) அவரது ரசிகர்கள் அவரை நினைவுகூர்ந்துவருகின்றனர்.
இதையும் படிங்க : 29ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் - தளபதி விஜய்க்கு ரசிகனின் கடிதம்..!