இயக்குநர் வெற்றிமாறன் - நடிகர் தனுஷ் நான்காவது முறையாக கூட்டணி அமைத்திருக்கும் ’அசுரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
எழுத்தாளர் பூமணியின் ’வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ’அசுரன்’ படத்தில் மஞ்சு வாரியர், பாலாஜி சக்திவேல், பிரகாஷ் ராஜ், பசுபதி, குரு சோமசுந்தரம், ஆடுகளம் நரேன், யோகி பாபு, பவன், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு இசை - ஜி.வி.பிரகாஷ்குமார், ஒளிப்பதிவு - வேல்ராஜ், வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி தாணு இப்படத்தைத் தயாரித்துள்ளார்.
ஆக்ஷன் டிராமா பாணியில் உருவாகிவரும் ’அசுரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ், நடிகை மஞ்சு வாரியர், இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
விழாவில் நடிகர் தனுஷ் பேசியதாவது,
'வட சென்னை' படத்துக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்று நான் கொஞ்சம் வருத்தத்தில்தான் இருந்தேன். அந்த வருத்தம் எனக்காகவோ அல்லது வெற்றிமாறனுக்காகவோ அல்ல. ஏனென்றால் நாங்கள் 2010ஆம் ஆண்டே தேசிய விருது வாங்கி விட்டோம். எனவே மீண்டும் வேண்டும் என்ற பேராசை எங்கள் இருவருக்கும் கிடையாது.
ஆனால் வட சென்னையில் கலை இயக்குநர் ஜாக்சன் (ஜாக்கி) மிகவும் கஷ்டப்பட்டு பணியாற்றினார். அவர் உழைப்புக்கு பலன் கிடைக்கும் என்று நினைத்திருந்தோம். மேலும், பரியேறும் பெருமாள் பெருமாள் பட இயக்குநர் மாரி செல்வராஜ், ராட்சசன் இயக்குநர் ராம், மேற்குத் தொடர்ச்சிமலை படங்களுக்கெல்லாம் விருது கிடைக்கவில்லையே என்று நினைத்தேன்.
வெற்றிமாறன் இதைப்பற்றிப் பேச வேண்டாம் என்று கூறியிருந்தார். இருந்தாலும் மனதில் இருந்ததைப் பேசிவிட்டேன். கடவுளின் ஆசிர்வாதத்தாலும், ரசிகர்களின் ஆதரவாலும் எந்தக் குறையும் இல்லாமல் இருக்கிறேன்.
தற்போதைய சூழலில் தயாரிப்பாளர்களிடம் சம்பளம் வாங்குவது என்பது சாதரணமானது இல்லை. எனது தனிப்பட்ட அனுபவமாக நான் பல தயாரிப்பாளர்களால் ஏமாற்றப்பட்டிருக்கிறேன். ஆனால் அசுரன் பட தயாரிப்பாளர் தாணு படம் தொடங்கும் முன்னரே எனது முழு சம்பளத்தையும் கொடுத்துவிட்டார். அதற்கு என்றைக்குமே நன்றியுடன் இருப்பேன் என்றார்.