இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமான 800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. இப்படம் குறித்த அறிவிப்புகள் வெளியானதிலிருந்தே எதிர்ப்புகள் எழத் தொடங்கின. 800 படத்திலிருந்து விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என தமிழ் ஆர்வலர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
எதிர்ப்புகள் வலுக்கவே விஜய் சேதுபதியை இப்படத்திலிருந்து விலகிக்கொள்ளுமாறு முத்தையா முரளிதரன் நேற்று (அக்.19) அறிக்கை வெளியிட்டார். அவரது அறிக்கையை ஏற்றுக்கொண்ட விஜய் சேதுபதி ட்விட்டரில் நன்றி வணக்கம் எனக்கூறி இப்படத்திலிருந்து விலகினார். இந்நிலையில், ரித்திஷ் என்ற நபர் விஜய் சேதுபதியின் மகளுக்கு ஆபாச வார்த்தைகளால் மிரட்டல் விடுத்துள்ளார்.
மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக எம்பி கனிமொழி, தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து பலரும் அந்த நபரை கைது செய்ய வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த நபர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆபாசமாக பேசுதல், கலகத்தை தூண்டும் வகையில் பேசுதல், தொழிற் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆபாச கருத்தை பதிவிட்ட நபரின் ஐடியை வைத்து குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இது தொடர்பான தகவலை சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்: சமூக வலைதளத்தில் எழும் கண்டனங்கள்!