சென்னை: நடிகர் உதயநிதி பெயருடன் தன்னை இணைத்து சமூக வலைத்தளங்களில் வெளிவரும் தகவல்கள் குறித்து விளக்கமளித்த சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டி, அரசியலுக்கு வரவுள்ளதாகவும், விரைவில் அதுகுறித்த அறிவப்பை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடிகை ஸ்ரீ ரெட்டி பத்திரிகையாளர்களை இன்று சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ‘எனக்கு கலைஞர் குடும்பத்தின் மீது பெரிய மாரியாதை உள்ளது. ஆனால், என் பெயரை தவறாக உபயோகித்து உதயநிதி ஸ்டாலின் பற்றி அவதூறாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். அது என்னுடைய முகநூல் கிடையாது, இப்படி என் பெயரை பயன்படுத்தி, ஃபேக் ஐடியில் அவதூறுகளை பரப்புபவர்கள் மீது விரைவில் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுப்பேன்.
உதயநிதியை நான் நேரில் கூட பார்த்தது கிடையாது. உதயநிதி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியில் என் பெயர் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.
நல்லது, கெட்டது இரண்டும் சேர்ந்ததுதான் மனித பிறப்பு. நானும் தவறுகள் செய்துள்ளேன் அதை இந்த ஊடகத்தின் மூலமாக தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு நேர்ந்த இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் யாருக்கும் நடக்கக்கூடாது என்பதற்காகவே நான் புகார் தெரிவித்து இருந்தேன்.
நான் தமிழக மக்களை நம்பி தமிழகத்தில் குடியேறியுள்ளேன். வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்னையும் வாழ வைக்கும் என நம்புகிறேன். இப்போது நான் தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறேன்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்னுடைய ரோல் மாடல். அதேபோன்று கலைஞர் கருணாநிதி தமிழகத்துக்கு கிடைத்த பொக்கிஷம். நான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் விரைவில் அரசியலுக்கு வருகிறேன். தமிழகத்துக்கு சேவை செய்ய காத்திருக்கிறேன். என்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து விரைவில் அறிவிப்பேன்’ என்று கூறினார்.
முன்னணி திரைப்பிரபலங்கள் பெயரைக் குறிப்பிட்டு, அவர்கள் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டதாகக் கூறி சர்ச்சையைக் கிளப்பிய நடிகை ஸ்ரீ ரெட்டி அவ்வப்போது பரபரப்பான கருத்துகளைத் தெரிவித்து லைம்லைட்டில் இருந்து வருகிறார். இதையடுத்து தற்போது உதயநிதியுடன், தன்னை இணைத்து வெளிவரும் தகவல்களுக்கு விளக்கம் அளித்திருப்பதுடன், அரசியல் பிரவேசம் குறித்தும் அதிரடியாகப் பேசியுள்ளார்.