கரோனா அச்சுறுத்தல் காரணமாக, தமிழ்நாட்டில் சின்னத்திரை வெள்ளித்திரை ஷுட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தினக்கூலி தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவித்துவருகின்றனர். அதேபோல், ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு, திரைப்படங்கள் தயாரிக்க இன்னும் மூன்று மாதங்கள் தேவைப்படும் என்பதால் தயாரிப்பாளர்கள் பலரும் மிகுந்த மனவேதனையில் உள்ளனர்.
இதனையடுத்து விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண், இயக்குநர் ஹரி ஆகியோர் தயாரிப்பாளர் நலன் கருதி தங்களது சம்பளத்தில் இருந்து 25 சதவீதத்தை குறைத்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து நடிகர் உதயா தனது சம்பளத்தை 40 சதவீதமாக குறைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்போது தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் கரானா வைரஸின் தாக்கத்திலிருந்து நிச்சயம் மீண்டும் வருவோம். மற்ற அனைத்து துறைகளை விட நம் திரையுலகம் இந்தக் கரோனா வைரஸால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
![Udhaya](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-corona-udhaya-script-7204954_08052020151824_0805f_1588931304_376.jpg)
நம் முதலாளிகள் அனைவரும் நன்றாக இருந்தால்தான் இந்த ஒட்டுமொத்த திரையுலகமும் நன்றாக இருக்கும். நான் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் "அக்னி நட்சத்திரம்" திரைப்படத்தில் தயாரிப்பாளரின் நலன் கருதி மிகக்குறைந்த சம்பளத்திற்கு ஒத்துக் கொண்டு நடித்துக் கொண்டிருக்கிறேன்.
தற்போது ஒட்டுமொத்த திரைஉலகமே ஸ்தம்பித்துப் போய் இருக்கின்ற இந்தச் சூழ்நிலையில், நான் மீண்டும் தயாரிப்பாளருக்கு உதவிடும் வகையில், நான் ஒத்துக் கொண்ட சம்பளத்திலிருந்து 40 சதவிகிதத்தை குறைத்துக் கொள்கிறேன்.
அதேபோல் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் "மாநாடு"படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன் அந்த படத்திலும் எனக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்திலிருந்து 40 சதவிகிதத்தை குறைத்துக் கொள்ள சம்மதிக்கிறேன். இதற்கு முன்னோடியாக இருந்த நடிகர் விஜய் ஆண்டனி , ஹரிஷ் கல்யாண்,இயக்குனர் ஹரி போன்றோர் சம்பளத்தை குறைத்துக் கொண்டிருக்க, அதே போல் நானும் எனது சம்பளத்தை குறைத்துக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.