இன்றைய டிஜிட்டல் உலகில், ஸ்மார்ட் டெக்னாலஜிகளின் ராஜ்ஜியம் பெருமளவில் நடந்து வருகிறது. காலை எழுந்ததும் கையில் எடுக்கும் ஸ்மார்ட்போனை, இரவு படுக்கைக்கு சென்றாலும் தள்ளி வைப்பதற்கு மனது வராது. அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகவே ஸ்மார்ட்போன் மாறியுள்ளது. அதேபோல, பயனர்களின் தினசரி வாழ்க்கையில் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களின் பயன்பாடும் அதிகளவில் உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் உதவி வருகிறது வாய்ஸ் அசிஸ்டென்ட் கேட்ஜெட்களான ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள்.
பல நிறுவனங்களின் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் சந்தையில் விற்பனைக்கு இருந்தாலும், அமேசானின் 'அலெக்சா'வுக்கு என அதில் தனி இடம் மக்களிடம் உண்டு. 'அலெக்சா' இந்திய சந்தையில் அறிமுகமாகி மூன்றாடுகள் நிறைவடைந்திருந்தாலும், அதன் மவுசு தற்போது வரை குறையவில்லை. தமிழ், ஹிந்தி, கன்னடா, தெலங்கு, மலையாளம், மராத்தி, குஜராத்தி என சகல மொழிகளிலும் பேசி 'அலெக்சா'அசத்தி வருகிறது.
வெற்றிகரமாக மூன்றாவது ஆண்டில் கால் பதித்துள்ளதை கொண்டாடும் வகையில், அலெக்சா ஸ்மார்ட் ஸ்பீக்கர்களுக்கு பல வகையான சலுகைகளை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அமேசான் இந்தியா கூறுகையில், "அலெக்சா கருவிக்கு இந்திய மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 2019ஆம் ஆண்டை காட்டிலும் 2020இல் இந்தியர்கள் அலெக்ஸாவுடன் பேசுவது 67 விழுக்காடும் அதிகரித்துள்ளது. 2020இல் தினம்தோறும் 19000 முறை அமேசான் அலெக்ஸாவிடம் இந்தியர்கள் ‘ஐ லவ் யூ’ சொல்லியுள்ளனர். அதேபோல, திருமணம் செய்துக்கொள்கிறாயா என 6 ஆயிரம் தடவை கேட்கின்றனர். ஜோக் சொல்லு, கதை சொல்லு என அலெக்சாவுடன் கலந்துரையாடி வருகின்றனர். மெட்ரோ அல்லாத நகரங்களிலும் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் எக்கோ சாதனத்தை வாங்கியுள்ளனர். இது இந்தியாவின் அலெக்சா பயனர்களில் 50 விழுக்காடுக்கும் அதிகமாகும் " எனத் தெரிவித்துள்ளனர்.