மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இலங்கை வழியாக திருச்சிக்கு ஸ்ரீலங்கன் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் சோதனையிட்டனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த அஜிஸ்கான் என்ற பயணி தனது உள்ளாடையில் மறைத்தும், பேஸ்ட் வடிவிலும் 255 கிராம் எடையுள்ள தங்க கட்டிகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல், இதே விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த கலில் ரஹ்மான் என்பவர் 459 கிராம் எடையுள்ள தங்க செயின், பேஸ்ட் வடிவில் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இவரிடமிருந்து நான்கு வீடியோ பிளே ஸ்டேஷன்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து, துபாயில் இருந்து இலங்கை வழியாக திருச்சி வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஹைதர் அலி என்ற பயணி 708 கிராம் எடையுள்ள தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் மூன்று பயணிகளிடமிருந்து ரூ. 55 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பிலான 1.422 கிலோ எடையுள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தங்கம் கடத்தி வந்த மூன்று பேரையும் வான் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கோழிக் கடைக்காரர் மரணத்தில் சந்தேகம்; மனைவி, உறவினர் கைது!