சென்னை கே.கே. நகர் பகுதியில் உள்ள பிளாட்பாரத்தில் ராபர்ட், கீர்த்தி தயாளன் உட்பட ஐந்து கட்டட தொழிலாளர்கள் தங்கி வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் நேற்று இரவு மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
அப்போது, கட்டட தொழிலாளர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதில், ராபர்ட் தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரமடைந்த தயாளன், மது பாட்டிலை உடைத்து ராபர்ட் கழுத்தில் குத்தியுள்ளார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கே.கே. நகர் போலீசார், ராபர்ட்டின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அருகிலிருந்த மற்றவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய கீர்த்தி தயாளனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.