மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர் ஆள் மாறாட்டம் செய்த விவகாரத்தில் வருவாய் துறையினர் விசாரித்ததில், முதல் பரிசு பெற்றவர் பனியனை மாற்றியது தெரிய வந்துள்ளது.
ஜனவரி 16ஆம் தேதி நடைபெற்ற உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 12 காளைகளை பிடித்து முதல் பரிசு பெற்ற விராட்டிபத்துவைச் சேர்ந்த கண்ணன், முன்பதிவு செய்யாமல் ஹரிகிருஷ்ணணின் 33ஆவது எண் கொண்ட பனியனை மாற்றி அணிந்து ஆள்மாறாட்டம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அதனைத் தொடர்ந்து மதுரை வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உத்தரவிட்டார். வருவாய் துறை அலுவலர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கண்ணன் பனியனை மாற்றி களத்தில் விளையாடியுள்ளது உறுதிசெய்யப்பட்டது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... கெத்து காட்டும் மாடுகளும் வீரர்களும்
33ஆம் எண் கொண்ட பனியன் கண்ணன் என்ற பெயரில் முன்பதிவு செய்யப்படவில்லை எனவும், ஆனால் பனியனை மாற்றி 12 காளைகளை பிடித்தது கண்ணன் என்பதும் உறுதி செய்யப்பட்டது. பரிசை யாருக்கு வழங்குவது என்பதனை விழா குழுவே முடிவு செய்யும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மாணிக்கம் முன்னிலையில் நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களை அறிவித்து அவர் பரிசு வழங்கியபோதே, இதில் குளறுபடி செய்யப்பட்டுள்ளதாக பலரும் குரல் எழுப்பி அவரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தது நினைவுகூரத்தக்கது.