உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் சட்டவிரோதமாக மணல் கடத்தியவர்களை துரத்தி பிடிக்கச் சென்ற தலைமைக் காவலர் டிராக்டர் ஏற்றிக் கொல்லப்பட்டார்.
ஆக்ரா பகுதிகளில் சட்ட விரோதமாக மணல் கடத்தப்படுவது குறித்து காவல் துறையினருக்கு புகார்கள் வந்துள்ளன. இதனையடுத்து ஆக்ரா காவல் கண்காணிப்பாளர் போட்ரே ரோஹன் பிரமோத் உத்தரவின்படி காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் சயான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மணல் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அப்போது சயான் - கெராகர் சாலை வழியாக 6 டிராக்டர்களில் மணல் கடத்தி சென்றதை தலைமைக் காவலர் சோனு குமார் சவுத்ரி கண்டுள்ளார். பின்னர் அந்த வாகனங்களை துரத்திச் சென்று நிறுத்த முயன்றுள்ளார். அதுசமயம் அவரின் மீது டிராக்டரை ஏற்றி கடத்தல் காரர்கள் கொன்றுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், இறந்துகிடந்த சோனு குமார் சவுத்ரியின் உடலை மீட்டு எஸ்.என் மருத்துவமனைக்கு உடற்கூறாவிற்காக அனுப்பிவைத்தனர். தற்போது இக்கொலைச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த டிராக்டர் வாகனங்களை தலைமைக்காவலர் துரத்திச்சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. இந்த வீடியோ குறித்து காவல்துறை இதுவரை எந்த அதிகாரப்பூர்வ கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.