இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள ஜெருசேலம் நகரில் அல் - அக்சா மசூதியில் ரம்ஜான் மாத தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை இஸ்ரேல் ராணுவத்தினர் விரட்டியடித்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காசாவில் உள்ள பாலஸ்தீனிய ஆயுதக் குழுவான ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.
அதைத்தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. முன்னதாக காசா பகுதியில் உள்ள இரண்டு கோபுரங்களை தகர்த்த இஸ்ரேல் ராணுவம், வான்வழி தாக்குதலில் ஈடுபட்டதால் காசா புகைமண்டலமாக காட்சியளித்தது.
இதையடுத்து, இஸ்ரேலின் டெல் அவீவ் நகரை நோக்கி ஆயிரக்கணக்கான வான்வழி தாக்குதல்களை ஹமாஸ் அமைப்பினர் நடத்தினர். இந்த தாக்குதலில் இஸ்ரேலின் லாட் பகுதியில் உள்ள குடியிருப்பு சேதமடைந்து இருவர் உயிரிழந்தனர்.
டெல் அவிவ் நகரை நோக்கி ஏவப்பட்ட பெரும்பாலான ராக்கெட்டுகளை நடு வானில் அழித்துவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. காசாவில் 17 குழந்தைகள் உட்பட 83 பேர் உயிரிழந்திருப்பதாக அந்த பிராந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. மேலும், 480 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர்.
இதனிடையே, காசா பகுதியில் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தளபதி உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், காசா மீதான தாக்குதல் தொடரும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டுக்கு பிறகு காசா பகுதியில் இரு தரப்பினரும் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், இருதரப்பும் உடனடியாக தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா அவை பொதுசெயலாளர் அண்டோனியோ குட்டெரஸ் வலியுறுத்தியுள்ளார்.