கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட பயணத்தில் அந்நாட்டு அரசர் முகமது பின் சல்மானுடன் சிறப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் குறித்து ஏதேனும் கேள்வி எழுப்பப்படுமா எனச் சர்வதேச அரங்கே உற்றுநோக்கிய நிலையில், இவ்விவகாரம் குறித்து அந்நாடு இந்தியாவுக்குச் சாதகமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
இந்தியாவில் நடைபெறுவது அதன் உள்நாட்டு விவகாரம் எனத் தெரிவித்துள்ள சவுதி அரசு, காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் சர்வதேச நாடுகளுக்கு விடுத்த கோரிக்கையை தாங்கள் நிராகரித்துள்ளதை சவுதி அரேபியா உறுதிப்படுத்தியுள்ளது. உள்நாட்டு, வெளிநாட்டு விவகாரங்கள் குறித்து, இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்ட நிலையில் அந்தந்த நாட்டின் இறையாண்மையில் தலையிடாத வகையில் வெளியுறவுக் கொள்கை உறுதிப்படுத்தப்படும் என இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.
இதையும் பாருங்க: ஐஎஸ் தலைவன் கொலை, தாக்குதல் வீடியோவை வெளியிட்ட அமெரிக்க ராணுவம்!
'டாவோஸ் இன் டெசர்ட்' என்று கூறப்படும் மூன்றாவது 'எதிர்கால முதலீடு முன்னெடுப்பு நடவடிக்கை' மாநாட்டில் சிறப்புப் பேச்சாளராக உரையாற்றிய நரேந்திர மோடி, இந்தியப் பொருளாதார வளர்ச்சி, நீண்ட கால பொருளாதார செயல்திட்டங்கள், நிதிச்சந்தைகள், தற்காலப் பொருளாதார நகர்வுகள் குறித்து விவாதித்தார்.
சவுதி அரேபிய அரசரான முகமது பின் சல்மான் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் துணை பிரதமரான பொறுப்புகளை வைத்துக்கொண்டு அந்நாட்டு அரசின் பிரதான முகமாகவும் திகழ்ந்துவருகிறார். அவரின் எண்ணத்தின்படியே இந்தியா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளைத் தனது கூட்டுறவு சக்தியாக தன்னுடன் சவுதி அரேபியா இணைத்துக்கொண்டது.
இந்தக் கூட்டுறவு நாடுகளில் சவுதி அரசுடன் இந்தச் சிறப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ள நான்காவது நாடு என்ற அந்தஸ்தை இந்தியா தற்போது பெற்றுள்ளது. பாதுகாப்பு, அரசியல், கலாசாரம் சார்ந்த அம்சங்களே இந்த ஒப்பந்தங்களில் முக்கியமாக இடம்பிடித்துள்ளது.
அதற்கு இணையாகப் பொருளாதாரம், முதலீடுகள் குறித்தும் கூடுதல் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொருளாதாரம் குறித்த ஒப்பந்தங்களில் இந்திய வர்த்தகத் துறை அமைச்சர், சவுதி அரேபியாவின் எரிசக்தித் துறை அமைச்சர், இந்தியாவின் நிதி ஆயோக் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
மேலும், இணையப் பாதுகாப்பு, பயங்கரவாத ஒழிப்பு, தகவல் பரிமாற்றம், குற்றத் தடுப்பு போன்ற அம்சங்களும் இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டன. பயங்கரவாதத்திற்கு எதிராகத் தீவிர நிலைப்பாட்டை எடுத்துள்ள இரு நாடுகளும் உள்நாட்டு, பிராந்திய, உலக அமைதிக்கு எதிராகச் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளை ஒருபோதும் வளரவிடமாட்டோம் எனத் தெரிவித்துள்ளன.
இந்தியாவின் 30 சதவிகித எரிசக்தி, 18 சதவிகித எண்ணெய் இறக்குமதி ஆகிய தேவைகளை சவுதி அரேபியா பூர்த்தி செய்துவரும் நிலையில், இந்தியா அந்நாட்டின் முக்கிய வர்த்தக சக்தியாகத் திகழ்கிறது. இதன் காரணமாகவே இந்தப் பயணத்தில் காஷ்மீர் உள்ளிட்ட எந்த விவகாரத்தையும் எழுப்பாதது இந்தியாவின் வியூகத்திற்குக் கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: உலகிலேயே அதிக வயதான மூதாட்டி மரணம்!