ஈரான் நாட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு நாடு முழுவதும் பல்வேறு போராடங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்களை தூண்டியதாக குற்றஞ்சாட்டி ஜாம் என்பவரை ஈரான் அரசு தூக்கிலிட்டது. 47 வயதாகும் ஜாம், இன்று (டிச.12) அதிகாலை தூக்கிலிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு ஈரான் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. உணவு பொருள்களின் விலை மிக அதிகமாக உயர்ந்ததைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற தொடங்கின. வடகிழக்கு ஈரானிலுள்ள மஷாத் என்ற நகரில் முதலில் போராட்டம் தொடங்கியது. ஆனால் மிக விரைவாகவே போராட்டங்கள் நாடு முழுவதும் பரவியது ஈரான் அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியது.
நாடு முழுவதும் போராட்டங்கள் பரவியதற்கு ஊடகவியலாளர் ஜாம், முக்கிய காரணம் என்று அந்நாட்டு அரசு குற்றஞ்சாட்டியது. அவரது அமட்நியூஸ் (AmadNews) தளத்திலும் அவர் உருவாக்கிய டெலிகிராம் க்ரூப்பிலும் அரசு உயர் அலுவலர்கள் குறித்து தவறான செய்திகள் பரப்பப்பட்டதாக அந்நாட்டு அரசு குற்றஞ்சாட்டியது.
2017ஆம் ஆண்டு ஈரான் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 25 பேர் உயிரிழந்தனர். மேலும், ஊடகவியலாளர் ஜாம் வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து அரசுக்கு எதிராக செயல்பட்டதாகவும் ஈரான் அரசு குற்றஞ்சாட்டியது. இதையடுத்து அவர் ஈரானில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
கடந்த சில ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஜாமை ஈரான் பாதுகாப்பு அலுவலர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் கைது செய்தனர். இந்தச் சூழ்நிலையில், அவர் இன்று(டிச.12) தூக்கிலிடப்பட்டார்.
இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானில் இரண்டாவது ராக்கெட் தாக்குதல்!