ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சைபீரியாவிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் சென்றுகொண்டிருந்தபோது அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
தொடர்ந்து, ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உயர் சிகிச்சைக்காக அவர் ஜெர்மனி கொண்டுசெல்லப்பட்டார். அலெக்ஸி நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாள்களுக்கு முன் ஜெர்மனி தெரிவித்திருந்தது சர்வதேச நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரஷ்ய அதிபருக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துவந்ததாலேயே அலெக்ஸி நவல்னிக்கிற்கு புதினின் உத்தரவின்படி விஷம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது தொடர்பாக பிரிட்டன் வெளியுறவுத் துறை செயலர் டொமினிக் ராப் தனது ட்விட்டர் பக்கத்தில், "அலெக்ஸி நவல்னிக்கிற்கு விஷம் கொடுக்கப்பட்டது குறித்து பிரிட்டன் தனது கவலையை தெரிவிக்க இன்று ரஷ்யாவின் தூதருக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அவர் மீது தடைசெய்யப்பட்ட ரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டது என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, இது குறித்து ரஷ்யா ஒரு முழுமையான, வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும்.
அலெக்ஸி நவல்னி கோமாவிலிருந்து மீண்டுவிட்டதாக கேள்விப்பட்டேன். அவரது உடல்நிலை தொடர்ந்து மேம்படும் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
ரஷ்யா எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி கோமாவிலிருந்து மீண்டுள்ளதாக ஜெர்மன் மருத்துவமனை நிர்வாகம் செப். 7ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'பிடன் ஆட்சிக்கு வந்தால் இரட்டை கோபுர தாக்குதல்போல வேறொன்று நடக்கும்'