ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 2036ஆம் ஆண்டுவரை அதிபர் பதவியில் நீடிப்பதற்காக அரசியலமைப்பு சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான மக்கள் வாக்கெடுப்பு ஏப்ரல் 22ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கரோனா வைரஸ் (தீநுண்மி) காரணமாக வாக்கெடுப்பு தள்ளிச்சென்ற நிலையில் மீண்டும் ஜூலை ஒன்றாம் தேதி நடத்த முடிவுசெய்தனர்.
கரோனா தொற்று காரணமாக மக்கள் ஒரே நேரத்தில் அதிகளவில் வருவதைத் தடுப்பதற்காக வாக்குச்சாவடிகளை ஒரு வாரத்திற்கு முன்னரே திறந்துள்ளனர். இதையடுத்து நேற்று வாக்கெடுப்புத் தொடங்கி ரஷ்ய மக்களும் ஆர்வமாக வாக்கெடுப்பில் பங்கேற்றனர். சுமார் 11 கோடி மக்கள் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவில் கரோனா அதிகம் பாதித்த பகுதிகளிலும் வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தற்போது, ஆறு லட்சத்திற்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளில் ரஷ்யா மூன்றாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.