நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பாக கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியிலிருந்து தூரத் தொலைவு கொண்ட பாதைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த விண்கலத்தின் விக்ரம் லேண்டர் செப்டம்பர் 2ஆம் தேதி தனியாக பிரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 1:30 மணியளவில் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறக்கப்படும் என உலக நாடுகள் அனைத்தின் கவனத்தையும் ஈர்த்துவந்தது. ஆனால் அதன் சிக்னல் திடீரென துண்டிப்பானது. இந்த பயணத்தில் சில பின்னடைவுகள் ஏற்பட்டாலும், பல நாடுகளின் தலைவர்கள் இஸ்ரோவின் முயற்சியை பெரிதும் பாராட்டிவருகின்ரனர்.
இந்நிலையில், மொரிஷியஸ் நாட்டின் பிரதமர் பிரவீந்த் ஜுக்நாத், விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க முயன்றதற்காக இஸ்ரோ குழுவினரையும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த இந்திய அரசாங்கத்தையும் பாராட்டியுள்ளார்.
மேலும், இந்தப் பயணம் இன்னும் முழுமையடையவில்லை என்றாலும், இந்தியா உலக அரங்கில் தனது தொழில்நுட்ப முன்னேற்றத்தை சந்திரயான் 2 திட்டத்தின் மூலம் நிறுபித்துள்ளது. எதிர்காலத்தில் இஸ்ரோவுடன் இணைந்து, மொரிஷியஸ் பல திட்டங்களை முன்னெடுக்கும் எனவும் அவர் கூறினார்.