கரோனா பரவல் தொடங்கி ஓர் ஆண்டை நெருங்கும் நிலையிலும்கூட அந்த வைரஸை கட்டுப்படுத்த முடியவில்லை. சில மாதங்களாக ஐரோப்பிய நாடுகளில் குறைந்திருந்த வைரஸின் தாக்கம் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இங்கிலாந்து, போலந்து போன்ற நாடுகளில் தினசரி கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் உயர தொடங்கியுள்ளது. இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சையளிக்க ஏதுவாக போலந்து வார்சாவிலுள்ள தேசிய மைதானத்தை கரோனா மருத்துவமனையாக மாற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
சுமார் 58,500 இருக்கைகளைக் கொண்ட இந்த அரங்கம், யூரோ 2012 கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்த கட்டப்பட்டது. இந்த அரங்கு ஒரே நேரத்தில் 500 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் மாற்றப்படும் என்றும் தேவைப்படும் நபர்களுக்கு ஆக்ஸிஜன் சிகிச்சையும் அளிக்கப்படும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலந்தில் திங்கள்கிழமை மட்டும் 7,482 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டது. அதேபோல 41 பேர் உயிரிழந்தனர்.
அந்நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 248 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 3,614 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 36,000 பேருக்கு கோவிட்-19 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன, அவற்றில் 21 விழுக்காடு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீங்க கொஞ்சம் 'ஷட்அப்' பண்ணுங்க - அதிபர் தேர்தல் விவாதத்தில் புதிய விதி