ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது குறித்த பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கு, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அனுமதி பெறுவதில் பல மாதங்களாக இழுபறி நீடித்து வந்தது. ஒரு வழியாக டிசம்பரில் நடைபெற்ற தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்த கையோடு பிரெக்ஸிட் மசோதாவை நிறைவேற்றினார், அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன்.
இந்நிலையில், சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ' ஐரோப்பிய ஒன்றியத்துடனான (EU) வர்த்தக ஒப்பந்தம் இந்த ஆண்டின் இறுதிக்குள் அமையும் வாய்ப்புகள் மிக அதிகம்' என்றார்.
மேலும், 'ஜனவரி 31ஆம் தேதி பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய பின்னர், இரு தரப்பினரும் அருமையான ஒரு புதிய கூட்டணியை உருவாக்கும் பணியைத் தொடங்குவார்கள்' என்றும் அவர் கூறினார்,
தொடர்ந்து வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசிய அவர், ' இந்த ஒப்பந்தம் தொடர்பாக தான் மிக, மிக நம்பிக்கையுடன்' இருப்பதாகவும் தெரிவித்தார்.
பிரிட்டன் வரும் ஜனவரி 31ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காஷ்மீர், ஈரான் விவகாரம் குறித்து பிரான்ஸ் அதிபருடன் விரிவாகப் பேசிய மோடி