உக்ரைன் நாட்டில் லிபோவெட்ஸ்கிப் பகுதியில் வசித்து வருபவர் ஸ்னெஸனா (22 - Snezhana) என்னும் பெண்மணி . இவருக்கு 9 மாதத்தில் அலெக்ஸாண்ட்ரா என்கின்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர் நேற்று தனது குழந்தையை நடைவண்டியில் படுக்க வைத்து விட்டு, தோட்ட வேலையில் பிஸியாக இருந்துள்ளார். அப்போது, அவர் வீட்டில் வளர்க்கும் இரண்டு பூனைகளில் ஒன்று, குழந்தை படுத்திருக்கும் நடைவண்டியில் ஏறி குழந்தையின் முகத்தில் அமர்ந்து கொண்டு, நன்கு உறங்கியுள்ளது.
பின்னர், சிறிது நேரம் கழித்து குழந்தையைப் பார்க்க ஸ்னெஸனா சென்றுள்ளார். அப்போது, நடை வண்டியிலிருந்து பூனை குதித்து ஓடியுள்ளது. இதில் குழப்பம் அடைந்த தாயார், நடைவண்டியில் குழந்தை மூச்சவிட முடியாமல் ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்துள்ளார்.
இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸில் விரைந்த மருத்துவக் குழுவினர், 30 முதல் 40 நிமிடங்கள் இடைவிடாமல் போராடியும் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை. இது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து காவல் துறை அலுவலர்கள் கூறுகையில்," குழந்தையின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பியுள்ளோம். அதில், மூச்சுத்திணறலால் தான் குழந்தை உயிரிழந்துள்ளது என உறுதியாகியுள்ளது. பூனையினால் குழந்தை உயிரிழந்த காரணத்தினால், தாயார் மீது வழக்குப்பதிவு எதுவும் செய்யவில்லை" என்றார்.
இதற்கு முன்பு, கிங்ஸ்டரிங்க்டோன் பகுதியில் பிறந்து 6 வாரங்கள் ஆன குழந்தை முகத்தில், பூனை அமர்ந்து உயிரிழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐஸ் ஸ்கேட்டிங் திருவிழாவில் சறுக்கி விளையாடும் மக்களின் க்யூட் புகைப்படங்கள்!