கிழக்கு ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள கஸ்னி மாகாண அலுவலகத்தில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட புலனாய்வுப் படையினர் படுகாயம் அடைந்துள்ளதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
இது குறித்து கஸ்னி மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் ஆரிஃப் நூரி கூறுகையில், 'மாகாண அலுவலகத்தின் பிரதான நுழைவுவாயிலைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆப்கன் ராணுவத்திடமிருந்து திருடப்பட்ட ஹம்வீவையில் (உயர் இயக்க பல்நோக்கு ராணுவ வாகனம்) வெடிபொருட்களை நிரம்பி, இந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர். இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். பலத்த காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் கவலைக்கிடமான நிலையில், மாகாண மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்' என்றார்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்றாலும் கடந்த காலங்களில் கஸ்னியில் தலிபான்கள் இது போன்ற பல தாக்குதல்களை நடத்தியுள்ளது அவர்கள் மீது சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
அமெரிக்க சமாதான தூதர் ஸல்மே கலீல்சாத், 'தலிபான்களுக்கு இடையே கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. தலிபான், ஆப்கானிஸ்தான் ஆகிய இருதரப்புக்கும் இடையே மார்ச் மாதத்தில் நடக்கவிருந்த பேச்சுவார்த்தைகள் தடைபட்டுக்கொண்டே செல்கிறது' என்றார். முழு துருப்புக்களையும் திரும்பப் பெறுவதில், தாமதம் செய்துவரும் அமெரிக்க அரசு உள் நாட்டில் எழுந்துள்ள அரசியல் பிரச்னைகளைச் சாதகமாகப் பயன்படுத்தி வருவதாக, ஆப்கன் அரசியல் வல்லுநர்கள் குற்றம்சாட்டி வருவது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க : தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!