இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் நீதிபதி அர்ஷத் மாலிக் கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு காரணமாக வெள்ளிக்கிழமை காலமானார்.
நீதிபதி அர்ஷத் மாலிக் மரணத்தை அவரது மைத்துனன் வாஷித் ஜாவத் உறுதிப்படுத்தியுள்ளார். அர்ஷத் மாலிக் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவிட்-19 பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து, அவருக்கு இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிபா சர்வதேச மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் இன்று காலமானார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அல் ஜஸீரா ஸ்டீல் மில்ஸ் வழக்கில் 2018ஆம் ஆண்டு குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார்.
பாகிஸ்தான் அரசியலில் பெரும்பரப்பரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் தீர்ப்பளித்தவர் அர்ஷத் மாலிக். முன்னதாக இந்த வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக தீர்ப்பளிக்க வற்புறுத்தப்பட்டதாக காணொலி வெளியானது.
இந்நிலையில் அர்ஷத் மாலிக்கை பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. ஒருவருட விசாரணைக்கு பின்னர் அர்ஷத் மாலிக் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
அர்ஷத் மாலிக் தனது மகன் மற்றும் இரு மகள்களுடன் இஸ்லாமாபாத்தில் வசித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் காலமானார்!