சீனா, அந்நாட்டில் வசிக்கும் வெளிநாட்டினருக்குத் துரிதமாக நுழைவு இசைவுச்சீட்டு (விசா) கிடைக்கும்வகையில் இந்திய அரசு இ-விசா என்னும் மின்னணு நுழைவு இசைவை அறிமுகப்படுத்தியது.
தற்போது சீனாவில் நிலைமை சரியில்லை. கரோனா வைரஸின் வீரியமான தாக்கம் காரணமாக அங்கு அறிவிக்கப்படாத சுகாதார அவசர நிலை நிலவுகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு வூகான் மகாணத்தில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
14 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் இந்தியத் தூதரகம் சார்பில் அவசர அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில், சீனா, அந்நாட்டில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டுவந்த மின்னணு நுழைவு இசைவுச்சீட்டு தற்காலிகமாக ரத்துசெய்யப்படுவதாகவும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே மின்னணு நுழைவு இசைவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தாக்குதலில் பாதிப்படைந்திருக்கும் வூகான் மாகாணத்திலிருந்து 323 பேர் இன்று அழைத்துவரப்பட்டனர்.
ஆக 654 பேர் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளனர். இன்று நாடு திரும்பியவர்களில் ஏழு பேர் மாலத்தீவு குடிமக்கள் ஆவார்கள். மாலத்தீவு குடிமக்களை மீட்டதற்கு அந்நாட்டின் அதிபர் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ்: தவறான தகவல் பரப்பிய மூவர் கைது!